இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள்: "உங்களில் எவருக்கேனும் மறைவான நற்செயல் ஒன்றைச் செய்ய இயலுமாக இருந்தால் செய்யுங்கள்''. (ஸஹீஹ் அல்பானி)
மறைவான நற்செயல் என்றால்? படைப்புகளில் எவருக்கும் தெரியாத ஒரு நல்ல காரியம்.
யாருக்கும் தெரியாமல் ஓர் ஏழைக்கு நீங்கள் உதவும் தர்மமாக இருக்கலாம்.
குடும்பத்தார் தூங்கிக் கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் நீங்கள் தொழும் இரண்டு ரக்அத் தொழுகையாக இருக்கலாம்.
வாகனம் ஓட்டும்போதோ, நடைப் பயிற்சியின்போதோ யாருக்கும் தெரியாமல் வழமையாக நீங்கள் ஓதும் குர்ஆனாக இருக்கலாம். தஸ்பீஹாக இருக்காலம்.
புரிந்துகொண்ட இறைவசனத்திற்காகவோ, நரகத்தை நினைத்தோ கலங்கியபோது யாருக்கும் தெரியாமல் நீங்கள் துடைத்த கண்ணீராக இருக்கலாம்.
யாருக்கும் தெரியாமல் இப்படியான நற்செயலை செய்ய முடியும் என்றால் செய்யுங்கள். முன்னோர்கள் இப்படித்தான் செயல்பட்டார்கள்.
ரோமுக்கு எதிரான ஒரு போரில்... ரோமின் பெரும் வீரன் ஒருவன் முஸ்லிம்களை சவாலுக்கு அழைத்தான்.
உடனே முஸ்லிம்களில் இருந்து முகமூடி அணிந்த வீரர் ஒருவர் வெளிப்பட்டு அவனுடன் மோதி அவனைக் கொன்றார். உடனே இரண்டாவது ரோம வீரன் ஒருவன் வந்தான். அவனையும் அவர் கொன்றார். மூன்றாவது வீரன் ஒருவன் வர, அவனையும் வீராவேசத்துடன் அந்த முஸ்லிம் வீரர் கொல்ல...
முஸ்லிம்களிடையே எழுச்சி ஏற்பட்டு, யாரந்த முஸ்லிம் வீரர்? என்று அறியும் ஆவலில் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
ஆனால் அவரோ தமது முகமூடியைக் கழற்ற மறுத்துவிட்டார். கூட்டத்தில் இருந்த அபூ உமர் எனும் வீரர் ஒருவர், அவருடைய முகமூடியைப் பிடித்து இழுக்க, முகம் வெளியே தெரிந்தது.
அது அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி).
கோபம் கொண்ட அப்துல்லாஹ் (ரலி), "அபூ உமரே! ஏன் இப்படிச் செய்தீர்? நீர் இப்படிச் செய்வீர் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை'' எனக் கடித்தார்.
முன்னோர்கள் இப்படித்தான்! அல்லாஹ்வுக்காகச் செய்யும் நற்செயலை யாருக்கும் காட்டமாட்டார்கள்.
செல்ஃபி எடுக்க மாட்டார்கள். முகநூலில் பதிய மாட்டார்கள். வலைத்தளத்தில் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் அதை அல்லாஹ்வுக்காகச் செய்திருப்பார்கள்.
✍️ நூஹ் மஹ்ழரி
 |