"ஓர் இறைநம்பிக்கையாளருக்கு மன அமைதி என்பது வாழ்க்கை சிக்கல்கள் இல்லாமல் இருப்பதனால் வருவதில்லை; மாறாக, இதயம் ஈமானினாலும் அல்லாஹ் மீதான உறுதியான நம்பிக்கையினாலும் நிறைவதனாலேயே கிடைக்கிறது.
இறைநம்பிக்கையாளர் சோதனைகளையும் கவலைகளையும் கடந்து செல்லக்கூடும், ஆனால் மற்றவர்களால் பெற முடியாத ஒரு நிம்மதியைத் தன் இதயத்தில் அவர் உணர்வார். ஏனெனில், தன் காரியங்களை நேர்த்தியாகத் திட்டமிடும் ஞானமிக்கவனும் கருணையாளனுமான ஒரு ரப் தனக்கு இருக்கின்றான் என்பதை அவர் அறிவார்.
மன அமைதிக்கான மிக முக்கிய காரணங்கள்:
1- அல்லாஹ்வை ஏகனாக ஏற்று அவனையே முற்றிலும் சார்ந்திருத்தல்:
அல்லாஹ் கூறுகிறான்: “எவர் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்.” [அத்-தலாக்: 3]. அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன என்பதை ஓர் அடியான் உறுதியாக நம்பும்போது, அவனிடமிருந்து அதிகமான பதற்றமும் பயமும் நீங்கிவிடுகின்றன.
2- அல்லாஹ்வை திக்ர் செய்தல் (நினைவுகூருதல்):
அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளார்களோ அவர்களின் இதயங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதனால் அமைதியடைகின்றன. அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வை நினைவுகூர்வதனால் தான் இதயங்கள் அமைதியடைகின்றன!” [அர்-ரஃத்: 28]. குர்ஆன் ஓதுதல், தஸ்பீஹ் செய்தல், பாவமன்னிப்புத் தேடுதல் (இஸ்திக்பார்) மற்றும் துஆ ஆகியவை மனதை விசாலமாக்கும் மாபெரும் வழிகளாகும்.
3- அல்லாஹ்வின் விதியைப் பொருந்தி ஏற்றுக்கொள்ளுதல் (ரிழா):
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலை வியப்பிற்குரியது! அவருடைய அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைகின்றன.” (நூல்: முஸ்லிம்). இறைநம்பிக்கையாளர், அதிலுள்ள ஞானம் தனக்கு மறைக்கப்பட்டிருந்தாலும், அல்லாஹ் தேர்வு செய்ததிலேயே நன்மை இருக்கிறது என்பதை அறிவார்.
4- தொழுகையைப் பேணித் தொழுதல்:
அல்லாஹ் கூறுகிறான்: “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்.” [அல்-பகரா: 45]. நபி ﷺ அவர்களுக்கு யாதேனும் ஒரு சிரமம் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாகத் தொழுகையின் பால் விரைபவர்களாக இருந்தார்கள்.
5- அதிகமாக இஸ்திக்பார் (பாவமன்னிப்பு) செய்தல்:
நூஹ் (அலை) அவர்களின் கூற்றாக அல்லாஹ் கூறுகிறான்: “‘உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்’ என்று கூறினேன்.” [நூஹ்: 10]. இஸ்திக்பார் என்பது துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறவும், இதய அமைதிக்கும், வாழ்வாதாரம் (ரிஸ்க்) பெருகவும் காரணமாகும்.
6- உளத்தூய்மையும் பிறர் மீது நல்லெண்ணம் கொள்ளுதலும்:
பொறாமை, குரோதம் மற்றும் பிறரின் தவறுகளில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவை இதயத்தைக் சோர்வடையச் செய்கின்றன. ஆனால், மன்னிப்பும் விட்டுக் கொடுப்பதும் மன அமைதிக்கான மிகப்பெரிய கதவுகளாகும்.
7- நற்செயல்களிலும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடுதல்:
மனதை நன்மையான காரியங்களில் ஈடுபடுத்தாவிட்டால், அது மனிதனை கவலைகளினாலும் தீய எண்ணங்களினாலும் ஆட்கொண்டுவிடும். இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இவ்வுலகில் ஒரு சொர்க்கம் இருக்கிறது; அதில் நுழையாதவர் மறுமையின் சொர்க்கத்தில் நுழைய முடியாது.” இறைநம்பிக்கையின் சுவையையும் அல்லாஹ்வுடன் கொண்டிருக்கும் ஆத்மார்த்த தொடர்பையும் தான் அவர்கள் இதன் மூலம் குறிப்பிட்டார்கள்.
சுருக்கம்: ஓர் இறைநம்பிக்கையாளரின் மன அமைதி என்பது உண்மையான ஈமான், அல்லாஹ் மீதான உறுதி, அவனது விதியை ஏற்றுக்கொள்ளுதல், அவனை அதிகமாக நினைவுகூருதல் மற்றும் அவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் கனியாகும். உள்ளத்தில் அல்லாஹ்வுடனான தொடர்பு எந்தளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்தளவுக்கு மன அமைதி அதிகரித்து கவலைகள் குறையும்."
-கலாநிதி அலி அஸ் ஸல்லாபி
 |