|
Posted by S Peer Mohamed
(peer) on 4/4/2026 6:21:17 AM
|
|||
இராணுவத்தவறும் அரசியல் தவறும் ஒன்றல்ல!! போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? ஈரான் மீதான போர் அதன் மூர்க்கமான அசைவுகளுடன் எகிறி எழுகின்றது .நான்கு நாட்கள்தான் யுத்தம் என்ற டொலால்ட் ட்றம்பின் ஊகத்தைக்கடந்து வாரங்களாக நீடிக்கின்றது.போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்பதையே அதன் போக்குகள் காட்டி நிற்கின்றன. அமெரிக்கா இஸ்ரேலுக்காக நடாத்தி வரும் ஈரானுக்கெதிரான யுத்தத்தில் நாளொன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் டொலரை இழக்கின்றது. ஆனால் எந்த இலக்கினையும் இதுவரை நெருங்கவுமில்லை. இப்போது தரைவழித்தாக்குதலுக்கான தயாரிப்புக்களில் அமெரிக்கா கவனம் குவிப்பதாக தெரிகிறது. ட்ரம்ப் போருக்கான காரணங்களாக அல்லது இலக்குகளாக முன்வைத்த மூன்றும் இதுவரை அடையப்பெறவில்லை.
01.ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக அழித்தல் 02.ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அழித்தல் 03.ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தல் இவற்றில் எந்த இலக்கும் இதுவரை அடையப்பெறாதததால் போர் நீடிக்கும் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈரான் மீதான போர் நீடிக்கக்கூடாது என்ற எதிர்ப்பலைகள் உலகம் முழுவதும் விரிவடைகின்றன. ஈரானில் ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்த அமெரிக்கா ஜனாதிபதி தனது நாட்டிலேயே இப்போது ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்தப் போரின் பொருளாதார விளைவுகளை முழு உலகமும் எதிர்கொள்ளத்துவங்கிவிட்டது. போர் துவங்கி மூன்றாவது நாளிலேயே அது ஆரம்பித்துவிட்டது. பெற்றோலியம், எரிவாயு, பெற்றோலியம்சார் உற்பத்திப்பொருட்களின் உலகத்தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப்பெருட்களின் சுமூகமான வினியோகத்திலுள்ள இடர்பாடுகள், பல நாடுகளில் விலைவாசி உயர்வு, உற்பத்தி ஆலைகளின் ஸ்தம்பிதம், போக்குவரத்து நெருக்கடிகள் என உலக சக்திவள நெருக்கடி பல்வேறு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்த்ததை விட ஈரான் போரில் மிகப்பலமாக நின்று பிடிப்பது தான் இங்கு ஊன்றிக்கவனிக்க வேண்டிய விடயம். ஈரானின் உளவுத்துறை மற்றும் போர் விமானக் கைத்தொழில் என்பன ஒப்பீட்டு ரீதியில் பலயீனமாகவுள்ளபோதும் அதன் ஏவுகணைத் தொழில்நுட்ப ஆற்றல் உலகையே வியப்பூட்டுகின்றது. போரில் யாருக்கு இதுகாறும் வெற்றி கிடைத்துள்ளது என்பதை விட எந்த நாட்டிற்கு பெரும் அழிவும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது முக்கியமானது. ஈரானிலும் இந்தப்போர் பெரும் இழப்புக்களை உருவாக்கியுள்ளது உண்மை. ஆயினும் இஸ்ரேல் அதன் ஏழு தசாப்த வரலாற்றில் என்றைக்கும் சந்தித்திராத அழிவுகளையும் நாசத்தையும் இந்தப்போரில் சந்தித்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத மாபெரும் உண்மையாகும். இந்தப்போருக்கு அயலில் உள்ள அறபு நாடுகள் வழங்கி வரும் விலையும் பாரியது. கடந்த நான்கு தசாப்தங்களாக தமது நாடுகளில் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் நடாத்தி வரும் தாக்குதல்களும் ஹுர்மூஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுப்பாடும் அறபு நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளகாக்கி இருக்கிறது. மத்திய கிழக்கை முழுவதுமாக தம் வசம் ஆக்கிக் கொள்வதற்கான இறுதி யுத்தமே இது (The Last War to confront ,conquest and controls the entire Middle East) என அமெரிக்கா கருதுவதால் இந்தப்போரில் என்ன விலை கொடுத்தேனும் வெல்ல வேண்டும் எனவும் ஈரானில் அமெரிக்க -இஸ்ரேல் சார்பான ஓர் ஆட்சி மாற்றம் எப்படியும் நிகழ்ந்தே ஆக வேண்டும் எனவும் ஒரு அசாதாரண வெறியில் டொலால்ட் ட்ரம்ப் சில அருவருப்பான அரசியல் இராணுவ முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு தனது சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மறுபுறம் எதிர்வரும் ஆகஸ்ட் பாராளுமன்ற (நெஸ்ஸட்) தேர்தலில் மீளவும் வெற்றி பெற்று, ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்து மீளவும் இஸ்ரேலின் பிரதமராக தன்னைத் தகவமைத்துக் கொள்ளத்துடிக்கும் நெடன்யாஹூவுக்கும் இஸ்ரேலிலுள்ள ஸியோனிஸ யூதர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போர் பொய்களைச்செல்லி ஆரம்பிக்கப்பட்டது .போரின் தொடக்கத்திலேயே உண்மைகள் கொல்லப்பட்டன .போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்தத்தருணத்திலும் ட்ரம்பும் நெடன்யாஹூவும் மாறி மாறி பகுத்தறிவுக்கு அறவே ஒவ்வாத பொய்களையே தொடர்ந்தும் சொல்லி தமது மக்களை ஏமாற்றி வந்தனர். இன்னும் ஏமாற்ற விளைகின்றனர். ஆனால், உண்மை இப்போது மக்களுக்கு புலனாகி வருகின்றது. ஆதலால் அவர்களுக்கு போரை நீடித்துச்செல்லலாமா என்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||